செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

3 வேளாண் சட்டங்களை மோடி ரத்து செய்ய வேண்டும்- திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

Published On 2020-12-01 01:31 GMT   |   Update On 2020-12-01 01:31 GMT
விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் மோடி அரசு ரத்துசெய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மகத்தான பேரணியை மதிக்காமல், புராரி மைதானத்திற்கு போனால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிபந்தனை விதிக்கும் சர்வாதிகார மேலாதிக்க மனப்பான்மை கொண்ட மத்திய பா.ஜ.க அரசுக்கு, நாங்கள் அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை, விவசாய மண்டிகள் இல்லை, இலவச மின்சாரம் இல்லை என்று அடுக்கடுக்கான துரோகத்தை செய்து, விவசாய பெருமக்களின் கண்ணிரண்டையும் பிடுங்கி கொண்டுவிட்டது மத்திய அரசு. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதைப் போல், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது என்று மன் கி பாத் உரையில் பேசியிருப்பது, விவசாயிகள் தமது வாழ்வுயிரையும் உரிமையையும் காக்க நடத்தி வரும் போராட்டத்தை அவமதிப்பதாகவும், எள்ளி நகையாடுவதாகவும் உள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளை சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குச் சுமுகமான முறையில் தீர்வு காண, பிரதமர் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. விவசாயிகளை அடக்கி ஒடுக்கி விட வேண்டும் என்று பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் கருதி, கச்சை கட்டிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த விவசாய விரோத சட்டத்தை, பாராளுமன்றத்திலேயே அ.தி.மு.க. ஆதரித்து குரல் கொடுத்தது, அ.தி.மு.க. விவசாயிகளுக்கு செய்த துரோகம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதுபோலவே, தமிழக சட்டமன்றத்திலும், அதற்கு நிகரான ஒரு சட்டத்தை அ.தி.மு.க., கொண்டு வந்துவிட்டது. விவசாயிகள் விரோத செயல்களில் பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

ஐதராபாத் மாநகராட்சியைக் கைப்பற்ற ஆர்வத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சியின் அளவுகூட, அறுபத்து இரண்டு கோடி விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் காட்டிட மறுப்பது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கவலை அளித்திடும் நிகழ்வாகும். ஆகவே, ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து, அவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமர் நரேந்திரமோடி அங்கேயே சென்று, இந்த நாட்டின் உயிரைக் காப்பாற்றும் உழைக்கும் வர்க்கமான விவசாயப் பெருமக்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என்று அந்த மைதானத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

உணவுப் பாதுகாப்பின் கேந்திர மையமாகத் திகழும் வேளாண்மையையும், அதன் உயிரோட்டமாகத் திகழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் காப்பாற்றிட, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், பிரதமர் நரேந்திரமோடி மனமார முன்வர வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News