செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை

Published On 2020-11-30 02:21 GMT   |   Update On 2020-11-30 02:21 GMT
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாவட்ட செயலாளர்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 29-ந் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான பரபரப்பு அறிக்கை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது. அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ந் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை. 2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசியலில் ஈடுபடலாமா என்று டாக்டர்களிடம் கேட்டபோது, கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், ‘வெளியான அறிக்கையில் என் உடல் நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி குறியாக மாறி போனது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக, சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதா என்பது குறித்தும், தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும், தேர்தல் பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், கட்சியை எவ்வாறு மக்களிடம் முன்னெடுத்து செல்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடத்தும் ஆலோசனைக்கேற்ப அவர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரிகிறது.
Tags:    

Similar News