செய்திகள்
திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் 150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் 15 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.
போலீஸ் விசாரணையில் அந்த கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக கொண்டு வந்தது திருவள்ளூரை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22), அவரது நண்பரான நந்தகுமார் (19) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.