செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 76 பேர் கைது
தஞ்சை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 76 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் கவனத்திற்கு வந்தது. உடனே அவர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி தஞ்சை நகர மேற்கு, கிழக்கு, தாலுகா, மருத்துவக்கல்லூரி போலீசார் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். தஞ்சை தற்காலிக பஸ் நிலையம், கீழராஜ வீதி, பர்மா காலனி, முனிசிபல் காலனி உள்ளிட்ட 21 இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். மேலும் இவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். வல்லத்தில் 2 பேர், கள்ளப்பெரம்பூர் பகுதியில் ஒருவர், ஒரத்தநாடு பகுதியில் 2 பேர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், திருவையாறு பகுதியில் 13 பேர், மெலட்டூர் பகுதியில் 2 பேர், அம்மாப்பேட்டை பகுதியில் 5 பேர், என 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 76 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கை தொடரும் எனவும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர்.