செய்திகள்
கைது செய்யப்பட்ட 6 பேரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது

ரூ.590 கோடி போதைப்பொருள் பறிமுதல் : தூத்துக்குடியில் கைதான 6 பேரிடம் விடிய, விடிய விசாரணை

Published On 2020-11-28 18:07 GMT   |   Update On 2020-11-28 18:07 GMT
ரூ.590 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தூத்துக்குடியில் கைதான 6 பேரிடம் அதிகாரிகள் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் வந்த இலங்கையை சேர்ந்த படகை கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் வைபவில் சென்று மடக்கி பிடித்தனர். அந்த படகில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்ல இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின், 20 சிறிய பெட்டிகளில் இருந்த ரூ.90 கோடி மதிப்பிலான கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் மற்றும் 5 நவீன கைத்துப்பாக்கிகள், சேட்டிலைட் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து படகில் இருந்த இலங்கை நீர்க்கொழும்பை சேர்ந்த நீந்துகுல சூர்ய சந்தமனுவேல் (வயது 50), வர்னகுலசூர்யஜீவன் (29), லட்சுமணன்குமார் (37), வர்ணகுலசாந்தசுனிமான் (25), சமீரா (32), நிஷாந்த் கமகயே (46) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 6 பேரும் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மதுரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து 6 பேரையும் நேற்று முன்தினம் தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல இயக்குனர் புருனே தை-மையிலான அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது மற்ற பிரிவு போலீஸ் அதிகாரிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த விசாரணை விடிய, விடிய நடந்தது.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

இலங்கை நிகம்புவை சேர்ந்த ஒருவர், பிடிபட்ட 6 பேரையும் அனுப்பி வைத்து உள்ளார். அவர்கள் கடந்த 16-ந் தேதி இலங்கையில் இருந்து புறப்பட்டு உள்ளனர். பாரசீக வளைகுடா பகுதிக்கு சென்று காத்திருந்தனர். அப்போது ஈரானில் இருந்து கராச்சி வழியாக ஒரு பாய்மரப்படகில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள் இலங்கையை சேர்ந்த கடத்தல்காரர்களின் படகுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அதன்பிறகு அங்கிருந்து சர்வதேச கடல் பகுதியில் கடத்தல்காரர்கள் பயணித்தபோது, டீசல் டேங்கில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிக அளவில் டீசல் வீணாகி உள்ளது. இதனால் மேலும் 20 நாட்கள் பயணம் செய்து ஆஸ்திரேலியா செல்ல முடியாது என்பதை உணர்ந்தனர். இதையடுத்து டீசல் பெறுவதற்காக இந்திய கடல் பகுதியில் காத்திருந்தபோது பிடிபட்டு உள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும், பயங்கரவாதிகளின் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடத்தப்படுகிறதா? அவர்கள் எந்தெந்த வழித்தடங்களில் கடத்தலை மேற்கொண்டு வருகின்றனர்? அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பன போன்ற விவரங்களையும் சேகரித்து உள்ளனர்.

கைதான 6 பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு 8 மணி அளவில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு 6 பேருக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உமாதேவி முன்னிலையில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டனர்.
Tags:    

Similar News