செய்திகள்
பரமத்தி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
பரமத்தி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூர் பெருமாம்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 50), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (45). அண்ணாதுரை தினமும் மது அருந்திவிட்டு மனைவி சகுந்தலாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்ணாதுரை நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அண்ணாதுரை விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.
இதை பார்த்த சகுந்தலா, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அண்ணாதுரையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அண்ணாதுரை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.