செய்திகள்
வெங்காய போண்டாவில் இருந்த பிளேடு

நிலக்கோட்டையில் பரபரப்பு- வெங்காய போண்டாவில் இருந்த ‘பிளேடு’

Published On 2020-11-28 02:52 GMT   |   Update On 2020-11-28 02:52 GMT
நிலக்கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாங்கிய, வெங்காய போண்டாவுக்குள் பிளேடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கனகராஜ் (வயது 57). இவர் தனது மகன், 2 பேத்திகளுடன் விளாம்பட்டி போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். கனகராஜ் தனது பேத்திகளுக்காக, நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு கடையில் வடை, போண்டா வாங்குவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை கனகராஜ், அந்த கடையில் 5 வெங்காய போண்டாக்களை வாங்கினார். பின்னர் அவற்றை வீட்டிற்கு எடுத்து சென்று, தனது பேத்திகளுக்கு கொடுத்தார். இதையடுத்து ஒரு பேத்தி, தனக்கு கொடுக்கப்பட்ட போண்டாவை பிய்த்து பார்த்தாள். அப்போது அதற்குள் முழு ‘பிளேடு’ இருந்தது. உடனே அவள், அந்த போண்டாவை தனது தாத்தாவிடம் காண்பித்தாள். போண்டாவில் பிளேடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது மற்றொரு பேத்தியிடம் இருந்த போண்டாவையும், மற்ற போண்டாக்களையும் பிரித்து பார்த்தார். ஆனால் மற்ற போண்டாக்களில் அதுபோன்று எதுவும் இல்லை. ஒரு போண்டாவில் மட்டும் பிளேடு இருந்தது.

இதுகுறித்து நிலக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேசுக்கு, கனகராஜ் தகவல் தெரிவித்தார். அதன்பிறகு அவர் போண்டா வாங்கிய கடைக்கு சென்றார். அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேசும் வந்தார். பின்னர் அவர்கள் அந்த கடையில் விசாரணை நடத்தினர்.

அப்போது போண்டா தயார் செய்த தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது போண்டோவில் எப்படி பிளேடு இருந்தது என்று தனக்கு எதுவும் தெரியாது என்றார். இதனையடுத்து போண்டா தயாரித்தபோது அஜாக்கிரதையாக செயல்பட்ட தொழிலாளியை உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்தனர்.

இதேபோல் அஜாக்கிரதை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தில் குழந்தைக்கு வாங்கிய ‘சாக்லேட்’டில் பீடி துண்டு இருந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியது. தற்போது நிலக்கோட்டையில் போண்டாவில் ‘பிளேடு’ இருந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News