செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- ஜவுளிக்கடை ஊழியர் பலி
தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஜவுளிக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தோகைமலை:
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நாடகாப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45). இவர் மணப்பாறையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பஞ்சவர்ணம் (37). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் நாடகாப்பட்டியில் இருந்து மணப்பாறைக்கு சென்றனர்.
பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவியும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். தோகைமலை அருகே மணப்பாறை-குளித்தலை மெயின் ரோட்டில் சின்னரெட்டிபட்டி பகுதியில் வந்தபோது மணப்பாறையில் இருந்து வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முனியப்பன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் முனியப்பனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருகின்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.