செய்திகள்
மரவள்ளிக்கிழங்கு

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை தொடர்ந்து சரிவு

Published On 2020-11-26 13:30 GMT   |   Update On 2020-11-26 13:30 GMT
பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ், அப்பளம் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.6 ஆயிரத்து 300-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,700 வரை குறைந்து ரூ.4 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது.

பரமத்திவேலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மரவள்ளிக்கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக்கிழங்கு விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் கவலையடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News