செய்திகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே இரு தரப்பினரிடையே மோதல்- வாலிபர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தனல்கொடி(வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை(30) மனைவி லட்சுமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது. இருவரது குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் தனித்தனியே புகார் கொடுத்தனர். அதன்படி தனல் கொடி கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, முருகன், சிங்காரம், சுந்தரம் ஆகியோர் மீதும், லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வள்ளி, தனல் கொடி, பெரியசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.