செய்திகள்
கோப்புபடம்

குளித்தலை அருகே மாயமான கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மீட்பு

Published On 2020-11-26 12:39 GMT   |   Update On 2020-11-26 12:39 GMT
குளித்தலை அருகே மாயமான கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேலைமலாடியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகள் துர்காதேவி (வயது 20) . இவர் குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்துள்ளார். இவர் உடல்நிலை சரியில்லாததால் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 23-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் துர்காதேவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் துர்காதேவியின் பெற்றோர் மகள் மாயமானது குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன துர்காதேவியை தேடிவந்தனர்.

இந்தநிலையில் குளித்தலை அருகேயுள்ள வடக்குமைலாடி பகுதியில் வாழைத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன், கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, அவர் வீட்டில் இருந்து காணாமல்போன துர்காதேவி என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து சென்ற கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News