செய்திகள்
அடையாற்றில் வெள்ளம்

கனமழையால் அடையாற்றில் வெள்ளம்: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2020-11-25 13:02 GMT   |   Update On 2020-11-25 13:40 GMT
செம்பரம்பாக்கம் ஏரியில் 3000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி நீர்மட்டத்தை எட்டி வரும் நிலையில் ஏரியிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் மதகுகளின் வழியே வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது அது 5000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் அடையாற்றில் வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் குன்றத்தூர் வட்டம் செம்பரபாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடையாற்றில் செம்பரபாக்கம் ஏரி நீர் கலக்கும்போது திருநீர்மலை மேலுள்ள நான்கு அடையாற்றின் கிளை நதியில் இரண்டு அடி மட்டம் நீர் உயர வாய்ப்பு உள்ளதால் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதியில் நீர் தேங்க வாய்ப்பு உள்ளது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி கிராமம், ஊரப்பாக்கம் கிராமம், மண்ணிவாக்கம் கிராமம், முடிச்சூர் கிராமம், பெருங்களத்தூர் கிராமம், மேற்கு தாம்பரம், திருநீர் மலை கிராமம், பொழிச்சலூர் கிராமம், அனகாபுத்தூர் கிராமம், சென்னை விமான நிலையம் மற்றும் அடையாறு ஆற்றின் வலது கரையில் உள்ள பகுதிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஆதனூர் கிராமம், கரசங்கால் கிராமம், மணிமங்கலம் கிராமம், வரதராஜபுரம் கிராமம், திருமுடிவாக்கம் கிராமம், எருமையூர் கிராமம், கேளம்பாக்கம் கிராமம், நரப்பாக்கம் கிராமம் மற்றும் அடையாறு ஆற்றின் இடது கரையை ஒட்டி உள்ள இடதுபுறம் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் சிறப்பு முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தாழ்வான பகுதிகளை சேர்ந்த மக்கள் பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News