செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில் நாளை இயங்கும்: நிர்வாகம்
சென்னை மெட்ரோ ரெயில் நாளை விடுமுறை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கான ரெயில்கள், புறநகர் ரெயில்கள், பெரும்பாலான மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுத்துறையில் பணிபுரியும் நபர்களை தவிர்த்து மற்ற துறைகளைச் சார்ந்த அனைவருக்கும் அரசு விடுமுறை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
பால் விற்பனை, பெட்ரோல், டீசல் பங்க்-கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை மெட்ரோ ரெயில் விடுமுறை கால அட்டவணைப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி இயக்கப்படும். 10 நிமிடத்திற்கு ஒரு ரெயில் என இடைவெளி விட்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.