செய்திகள்
தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
நிவர் புயல் காரணமாக நாளை தமிழகத்தின் கடற்கரை மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிமை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி நாளை மதியம் அல்லது மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் சென்னையில் இருந்து சுமார் 430 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து சுமார் 330 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கரையை கடக்கும்போது 120 கி.மீட்டர் முதல் 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை கடற்கரை மாவட்டப் பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்றும், அதேபோல் தமிழகத்தின் வடக்கு உள்மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் மிகவும் பாதிக்கக்கூடிய பகுதியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.