செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

சாத்தான்குளம் வழக்கில் கைதான 4 போலீஸ்காரர்கள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Published On 2020-11-24 09:27 GMT   |   Update On 2020-11-24 09:27 GMT
சாத்தான்குளம் வழக்கில் கைதான 4 போலீஸ்காரர்கள் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஸ்ரீதர் உள்பட பலர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களை மதுரை மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் தள்ளுபடி செய்தன.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் போலீஸ்காரர்கள் முருகன், வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் மீண்டும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மனுதாரர்களுக்காக வாதாட மூத்த வக்கீல் ஆஜராக உள்ளார். இதனால் இந்த மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினர். இதையடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News