செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

நிவர் புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி- அமைச்சர் அறிவிப்பு

Published On 2020-11-24 02:51 GMT   |   Update On 2020-11-24 02:51 GMT
‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

‘நிவர்’ புயலால் படகுகள் சேதமடைந்தால் நிவாரண உதவி உடனுக்குடன் வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் நீரில் மக்கள் சிக்கினால் மீட்பதற்கு மீன்பிடி படகுகளுடன் மீனவர்கள் தயாராக உள்ளனர்.

‘நிவர்’ புயல் குறித்து அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாராகவே இருக்கிறது. மீனவர்களுக்கும் அனைத்து விதமான அறிவுரைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் 100 சதவீத மீனவர்கள் மீன்பிடி படகுகளுடன் பத்திரமாக இருக்கிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை 143 படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். படகுகளுடன் சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்களும் தற்போது கரை திரும்பி கொண்டிருக்கிறார்கள்.

10 முதல் 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்றிரவு (அதாவது நேற்று) அவர்கள் கரை திரும்புவார்கள் என்ற நிலை இருக்கிறது. எனவே மீனவர்களுக்கும், படகுகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஏற்கனவே பல புயல்களை நாம் திறம்பட சமாளித்திருக்கிறோம்.

எனவே அந்த அனுபவம் நமக்கு நிச்சயம் கைகொடுக்கும். எந்த பாதிப்பும் இருக்காது. அந்தந்த மாவட்டங்களில் மீனவர்கள் அதிகாரிகளுடன் உடனுக்குடன் தொடர்புகொள்ள கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. அரசு விழிப்புடன், முழுவீச்சுடன் எல்லா பணிகளையும் முடுக்கி விட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News