செய்திகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் திசை

சென்னையை நெருங்கும் புயல் சின்னம்- 120 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க வாய்ப்பு

Published On 2020-11-23 08:37 GMT   |   Update On 2020-11-23 08:37 GMT
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத் தாழ்வு மண்டலம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் சென்னையை நோக்கி வருகிறது.
சென்னை:

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை தீவிர புயலாக (நிவர் புயல்) வலுவடைந்து, நாளை மறுநாள் பிற்பகல் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலையில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 590 கிமீ தொலைவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது. அதன்பின்னர் அதன் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. 

இன்று மதிய நிலவரப்படி காற்றழுத் தாழ்வு மண்டலம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் சென்னையை நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை கடலோர மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இடையிடையே 100 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்திலும், இடையிடையே 120 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Tags:    

Similar News