செய்திகள்
மணப்பாறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
மணப்பாறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட காரமேட்டுப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சுமார் 15 அல்லது 20 நிமிடம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் முழுமையாக இல்லை.
இதனால் குடிநீர் இன்றி கடும் அவதிக்கு ஆளாகி வந்த மக்கள் இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை இருப்பதாக கூறி கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் நகராட்சி சார்பில் வந்தவர்கள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.