செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Published On 2020-11-18 07:00 GMT   |   Update On 2020-11-18 07:00 GMT
10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
சென்னை:

கொரோனா அச்சுறுத்தலால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.  இதை தொடர்ந்து, தாமதமாக மாணவர்சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவும் கைவிடப்பட்டது.

இதனிடையே, ஆன்லைன் வகுப்புகள் மூலம் குறைந்த அளவிலேயே பாடம் நடத்தப்படுவதால் 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. மீதமுள்ள 60% பாடப்பகுதிகளில் இருந்தே பொதுத்தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும் இந்த முறையும் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையனிடம், 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தமிழகத்தில் வரும் 2021-ஆம் ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதிலளித்திருந்தார்.
Tags:    

Similar News