செய்திகள்
கூத்தாநல்லூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
கூத்தாநல்லூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, புளியங்குடி, நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது21). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக இவர் புளியங்குடிக்கு வந்தார்.
இந்தநிலையில் கோரையாறு அருகே உள்ள சித்தாம்பூரில் உள்ள தனது மாமா வீட்டுக்கு கடந்த 13-ந் தேதி சதீஷ்குமார் சென்றார். அங்கு அப்பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் கோரையாறு பாலத்தின் தடுப்பு சுவர் மீது உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சதீஷ்குமார் தவறி ஆற்றில் விழுந்தார்.
இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் இறங்கி சதீஷ்குமாரை தேடினர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை சதீஷ்குமார் வடகோவனூர் பகுதியில் கோரையாற்றில் பிணமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.