செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Published On 2020-11-15 19:08 GMT   |   Update On 2020-11-15 19:08 GMT
தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவாக பதிவாகி இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது பட்டாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கமான ஒன்று.

இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் பட்டாசு வெடிப்பதில் வழக்கம்போல் இருந்த ஆர்வம் குறையவில்லை என்பதற்கு தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி தினத்தன்றும் வானத்தை நோக்கி சீறிப்பாய்ந்த பட்டாசுகளும், மத்தாப்புகளுமே சாட்சி.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் காற்றின் மாசு அளவு அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கின.

அதாவது, காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை பின்பற்ற பொதுமக்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காற்று, ஒலி மாசு அளவு கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவும், பின்பும் காற்று, ஒலி மாசு அளவை கணக்கிட சென்னையில் பெசன்ட் நகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை ஆகிய 5 இடங்களில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த கருவியில் பதிவான காற்று, ஒலி மாசு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவும், தீபாவளி பண்டிகை அன்றும் பெசன்ட்நகர் உள்ளிட்ட 5 இடங்களில் காற்று மற்றும் ஒலி மாசு கண்காணிக்கப்பட்டன.

இந்த ஆய்வில் அனைத்து இடங்களிலும் கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவவை நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மிகவும் குறைந்தே பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டது.

திருவல்லிக்கேணி மற்றும் சவுகார்பேட்டை பகுதிகளில் மட்டும் மிதக்கும் நுண்துகள்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சற்றே கூடுதலாக இருந்தது.

வளி மண்டல ஒலி மாசின் அளவு தீபாவளிக்கு முன்பு 69 டெசிபல் ஆக இருந்தது. தீபாவளியன்று ஒலி மாசின் அளவு அதிகரித்து 78 டெசிபல் ஆக பதிவானது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஒலி மாசு 4 டெசிபல் முதல் 6 டெசிபல் வரை குறைந்துள்ளது.

இந்த தீபாவளிக்கு வளிமண்டல காற்று மற்றும் ஒலி மாசு குறைந்ததற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டுவாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் விழிப்புணர்வு தான் காரணம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News