செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ் கல்வி கழகத்துக்கு டெல்லியில் ரூ.5 கோடியில் புதிய பள்ளி கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2020-11-12 19:21 GMT   |   Update On 2020-11-12 19:21 GMT
டெல்லி தமிழ் கல்வி கழகத்துக்கு ரூ.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
சென்னை:

டெல்லி தமிழ் கல்வி கழகத்துக்கு ரூ.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெல்லி தமிழ் கல்வி கழகத்தால் கடந்த 90 ஆண்டுகளாக டெல்லியில் 7 இடங்களில் மொழிவாரி சிறுபான்மையின மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பள்ளிகளில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடமாகவும், 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்ப பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இங்கு படிக்கும் சுமார் 7,500 மாணவர்களில் 85 சதவீதம் பேர் தமிழர்கள். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடப் புத்தகங்களை விலையில்லாமல் ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். தமிழர்களின் நலன்கருதி டெல்லி வளர்ச்சி குழுமத்தால் டெல்லி தமிழ் கல்வி கழகத்திற்கு மயூர்விகாரில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இங்கு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு முதல்-அமைச்சரிடம், டெல்லி தமிழ் கல்வி கழகம் நிதி உதவி கோரியது. இதை கனிவுடன் ஏற்றுக்கொண்டு, பள்ளி கட்டிடம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி, 6,515 சதுர மீட்டர் பரப்பளவில் 4 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அந்த கட்டிடத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், க.பாண்டியராஜன், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர்கள் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா, ஆஷிஷ் வச்சானி, பள்ளிக்கல்வி ஆணையர் என்.வெங்கடேஷ், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News