செய்திகள்
தலில்சந்த், புஷ்பாபாய், ஷீத்தல், மருமகள் ஜெயமாலா

குடும்ப பிரச்சினையால் சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்றது மருமகளா? - பரபரப்பு தகவல்கள்

Published On 2020-11-12 19:09 GMT   |   Update On 2020-11-12 19:09 GMT
குடும்ப பிரச்சினையால் சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்றது மருமகளா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் புனேயில் முகாமிட்டுள்ளனர்.
சென்னை:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தலில் சந்த் (வயது 74). சென்னை சவுகார்ப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். வால்டாக்ஸ் சாலை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (38) ஆகியோருடன் வசித்துவந்தார். இவருடைய மகள் பிங்கி (35) திருமணமாகி பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மாலை தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்தநிலையில் ரத்தவெள்ளத்தில் படுக்கை அறையில் பிணமாக கிடந்தனர்.



பரபரப்பு மிகுந்த பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தலில் சந்த் நிதிநிறுவனம் நடத்தி வந்ததால், கொள்ளை முயற்சியால் இந்த கொலைகள் நடந்ததா? அல்லது சொத்து தகராறு, முன்விரோதம் போன்ற காரணங்களால் நடந்ததா? என்று யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குற்றவாளிகளை பிடிப்பதற்கு 5 தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.

அப்பகுதியில் பொறுத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், மகள் பிங்கி மற்றும் குடியிருப்புவாசிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் உடனடியாக துப்பு துலங்க தொடங்கியது. குடும்ப பிரச்சினையில் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் உள்ளிட்டோருடன் இணைந்து, இந்த கொடூர கொலைகளை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஜெயமாலா மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர். இவருக்கும் ஷீத்தலுக்கும் திருமணமாகி புனேயில் சில ஆண்டுகள் வசித்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. எனவே ஷீத்தலுடன் வாழ பிடிக்காமல், புனே நீதிமன்றத்தில் ஜெயமாலா விவாகரத்து கோரியும், தனக்கு ஜீவனாம்சமாக ரூ.5 கோடி தர வேண்டும் என்று கூறியும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இருவீட்டாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஷீத்தலின் தந்தை தலில் சந்த் தனது உறவினர்களுடன் புனே சென்று ஜெயமாலா குடும்பத்தினரை கடுமையாக எச்சரித்து வந்ததாக தெரிகிறது. பதிலுக்கு ஜெயமாலா உறவினர்கள், சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் ஆகியோர் கடந்த மாதம் சென்னை வந்து தலில் சந்த் குடும்பத்தினரிடம் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஷீத்தல், ஜெயமாலா ஆகியோர் இடையே ஏற்பட்ட விரிசல் இருவர் குடும்பத்தினர் இடையே தொடர்ந்து பகையை வளர்த்தது. இந்தநிலையில்தான் ஜெயமாலா, தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ், 2 உறவினர்கள் என 5 பேர் நேற்றுமுன்தினம் ஷீத்தல் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது மாமனார் தலில் சந்திடம், உடல்குறைபாடு உள்ள மகனை திருமணம் செய்து வைத்து என் வாழ்க்கையை சீரழித்துவிட்டீர்கள். எனவே எனக்கும், என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் ரூ.5 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும். சொத்திலும் பங்கு தர வேண்டும்’ என்று கேட்டு ஜெயமாலா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக அவருடைய சகோதரர்களும், உறவினர்களும் குரல் கொடுத்தனர்.

அப்போது தலில் சந்த், ‘முதலில் நீங்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். எதுவாக இருந்தாலும் சட்டரீதியாக பார்த்துக்கொள்வோம்’ என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். ஷீத்தலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களை வெளியேற்ற முயற்சித்துள்ளார்.

எப்படியாவது தலில் சந்தின் குடும்ப சொத்தில் பங்கையும், ரூ.5 கோடி பணத்தையும் பெற்றுவிடலாம் என்ற முடிவோடு வந்திருந்த ஜெயமாலா குடும்பத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால் அது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், மறைத்து வைத்து கொண்டுவந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியாவது சாதித்துவிட வேண்டும் என்று ஜெயமாலா குடும்பத்தினர் துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தலில் சந்த் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயமாலா குடும்பத்தினர், துப்பாக்கியை எடுத்து 3 பேரையும் அடுத்தடுத்து சுட்டனர்.

துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் 3 பேரின் உடலில் துளைத்தது. முதலில் துப்பாக்கி குண்டுக்கு தலில் சந்த் பலியானதாகவும், அடுத்து புஷ்பா பாய் குண்டடிபட்டு சரிந்தார் என்றும், தப்ப முயன்ற ஷீத்தல் கடைசியாக சுடப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

தலில் சந்தின் தாடை பகுதியிலும், புஷ்பா பாய் நெற்றியிலும், ஷீத்தலின் தலை உச்சியிலும் குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் உள்ளது.

3 பேரும் உயிரிழந்ததும் எந்தவித பதற்றமும் இல்லாமல் ஜெயமாலாவும், அவருடைய உறவினர்கள், சகோதரர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அவர்கள் முககவசம் அணிந்திருந்ததாலும், நடை, உடை, பாவனைகளை வைத்து வீட்டில் இருந்து வெளியே சென்றது ஜெயமாலாதான் என்பதை தலில் சந்தின் மகள் பிங்கி உறுதிப்படுத்தினார். அதன்பேரில் போலீசார் அவர்கள் சென்ற வழி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஜெயமாலா குடும்பத்தினர் காரில் ஒரு குழுவாகவும், ரெயிலில் ஒரு குழுவாகவும் பிரிந்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் விமானம் மூலம் புனே சென்றுள்ளனர்.

காரில் செல்லும் நபர்களை பிடிக்க 2 தனிப்படையும், ரெயிலில் சென்ற நபர்களை பிடிக்க மற்றொரு தனிப்படையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ரெயிலில் செல்லும் நபர்களை ஏதேனும் ரெயில் நிலையத்தில் மடக்கி கைது செய்வதற்காக ரெயில்வே போலீசார் உதவியையும் போலீசார் நாடியுள்ளனர். இடையில் எங்கும் இறங்கி அவர்கள் தப்பிச்செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாமனார் தலில் சந்த், மாமியார் புஷ்பா பாய், கணவர் ஷீத்தல் ஆகியோரை மருமகள் ஜெயமாலாதான் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்றும், ஜெயமாலாவின் சகோதரர்கள் விகாஷ், கைலாஷ் ஆகியோர்தான் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்றும் இருவேறு யூகங்கள் அடிப்படையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உறவினர்கள் என்ற போர்வையில் வடமாநில கூலிப்படையினரை அழைத்து வந்து ஜெயமாலா குடும்பத்தினர் இந்த கொலைகளை செய்தார்களா? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.

ஆனால் ஜெயமாலாவும், அவருடைய உறவினர்கள், சகோதரர்கள் பிடிபடும்போதுதான் யார் துப்பாக்கியால் சுட்டார்கள் என்பதும், யார் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவரும்.

வடமாநிலங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். சென்னை யானைகவுனியில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இங்கு ஏற்கனவே 2 முறை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

யானைகவுனியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருந்த எலக்டிரிக்கல் மொத்த வியாபாரி ஆசிஷ்சர்மா(50) கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி மர்மமான முறையில், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். விசாரணையில் அவரது உறவினரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

சவுகார்பேட்டையில் டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 25 நாட்களுக்கு பிறகு ராகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது 3-வது முறையாக நடைபெற்றுள்ள துப்பாக்கிசூடு சம்பவம் 3 உயிர்களை பலிவாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News