செய்திகள்
மயிலம் அருகே கார் மோதி வாலிபர் பலி
மயிலம் அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம்:
மயிலம் அருகே உள்ள கள்ளக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(வயது 20). சம்பவத்தன்று இவரும், இவரது நண்பரான கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் செங்கேணி(17) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கள்ளக்கொளத்தூரில் இருந்து சித்தாமூருக்கு சென்றனர்.
அப்போது எதிரே வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தமிழ்ச்செல்வன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்ச்செல்வன் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.