செய்திகள்
சென்னை உள்ளிட்ட 32 இடங்களில் நடந்த வருமான வரி சோதனை- கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு
சென்னை உள்ளிட்ட 32 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், சுமார் 500 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை, மும்பை, கொல்கத்தா, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்பட நாடு முழுவதும் 32 இடங்களில் கடந்த 10-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் தங்கம் மொத்த விற்பனையில் ஈடுபடும் டீலர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அவரது நகைக்கடை மற்றும் அவருக்கு சொந்தமான பங்களாவிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர்களின் வணிக தொடர்பின் அடிப்படையில் மும்பையிலும் சோதனை நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள ஒரு நகைக் கடையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் 10ம்தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.500 கோடி அளவிலான வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கணக்கில் காட்டப்பட்டதைவிட சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 814 கிலோ கூடுதல் தங்கம் இருப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரிவிதிப்பின்கீழ் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.