செய்திகள்
தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் 2½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2020-11-11 10:37 GMT   |   Update On 2020-11-11 10:37 GMT
திருச்சி விமான நிலையத்தில் 2½ கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு:

கடந்த சில நாட்களாக துபாயில் இருந்து திருச்சிக்கு வரும் சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கிலோ கணக்கில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 1½ கிலோ தங்கமும், கடந்த வாரம் 2½ கிலோ தங்கமும் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை திருச்சிக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, துபாயில் இருந்து வந்த அதிராமபட்டினத்தை சேர்ந்த ஹாஜிமுகமது மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் ஆகியோரின் ஆடைகளை சோதனை செய்த போது, ஜீன்ஸ் பேன்டில் சுமார் 2½ கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து தங்கத்தை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1¼ கோடி ஆகும்.
Tags:    

Similar News