செய்திகள்
மாநகர பஸ்

தீபாவளிக்கான சிறப்பு பஸ்கள் புறப்படும் இடங்களுக்கு செல்ல கூடுதல் மாநகர பஸ்கள்

Published On 2020-11-11 03:03 GMT   |   Update On 2020-11-11 03:03 GMT
தீபாவளிக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு பஸ்கள் புறப்படும் இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை:

மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபாவளியை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிட ஏதுவாக சென்னையில் இருந்து 11-ந் தேதி (இன்று) 2 ஆயிரத்து 225 பஸ்களும், 12-ந் தேதி (நாளை) 3 ஆயிரத்து 705 பஸ்களும், 13-ந் தேதி (நாளை மறுதினம்) 3 ஆயிரத்து 580 பஸ்களும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட மாதவரம் புறநகர் பஸ்நிலையம், தாம்பரம் புதிய பஸ்நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கோயம்பேடு பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து 11, 12, 13-ந் தேதிகளில் இந்த சிறப்பு பஸ்கள் புறப்பட இருக்கின்றன.

அவ்வாறாக சிறப்பு பஸ்கள் புறப்படும் இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு ஏதுவாக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு இணை மாநகர பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு பஸ்நிலையம் செல்வதற்கு கூடுதலாக 116 பஸ்களும், தாம்பரம் புதிய பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிலையத்துக்கு செல்வதற்கு கூடுதலாக 114 பஸ்களும், பூந்தமல்லி பஸ்நிலையத்துக்கு செல்வதற்கு கூடுதலாக 57 பஸ்களும், மாதவரம் புறநகர் பஸ்நிலையத்துக்கு செல்ல கூடுதலாக 16 பஸ்களும், கே.கே.நகர் பஸ்நிலையம் செல்வதற்கு கூடுதலாக 7 பஸ்களும் என மொத்தம் 310 சிறப்பு இணை பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

இந்த பஸ்கள் அனைத்தும் 11, 12, 13-ந் தேதிகளில் 24 மணி நேரமும் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News