செய்திகள்
மதுரை ஐகோர்ட்

தமிழகத்திலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது - மதுரை ஐகோர்ட் கருத்து

Published On 2020-11-04 23:14 GMT   |   Update On 2020-11-04 23:14 GMT
தமிழ்நாட்டிலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை:

தமிழ்நாட்டிலேயே தமிழ் வாழவில்லை என்றால் வேறு எங்கும் வாழ முடியாது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சக்திராவ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை சட்ட கல்லூரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்து முடித்து, கடந்த 2017-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தேன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துணை கலெக்டர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தேன்.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். அதைத் தொடர்ந்து, பிரதான எழுத்து தேர்வு அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழி கல்வியில் படித்ததற்கான ஒதுக்கீட்டின் கீழும் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

விதிகளின்படி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் இந்த நேர்முகதேர்வில் பங்கேற்க எனக்கு தகுதி உள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சலுகையின்கீழ், தொலைநிலை கல்வியில் படித்தவர்களை நேர்முக தேர்வுக்கு அழைத்து இருந்தது தெரியவந்தது. தொலைநிலை கல்வியில் படிப்பவர்கள் முழுமையாக தமிழ் வழியில் படிப்பதில்லை. இவர்களை தமிழ் வழியில் படித்தவர்களாக கருத முடியாது.

எனவே தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சலுகையின்கீழ் மேற்கண்ட பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். நேரடியாக கல்லூரியில் தமிழ்வழி கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாட்டில் தமிழ்வழி கல்வியில் படிப்பவர்கள் குறைந்துவருகின்றனர். தமிழ்வழி கல்வியை ஊக்குவிப்பதற்காகத்தான், அரசுப்பணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதும் என்றால், இதன் நோக்கம் சிதைந்துவிடும். இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் மறைந்துவிடும். தமிழ்நாட்டில் தமிழ் வாழவில்லை என்றால், வேறு எங்கும் வாழ முடியாது.

எனவே தொலைதூர கல்வி மூலம் தமிழில் படித்தவர்களுக்கு இந்த 20 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் இடம் வழங்கப்படமாட்டாது என அரசாணையில் திருத்தம் கொண்டுவரும் வரை ஏன் குரூப்-1 தேர்வு நடத்த தடை விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News