செய்திகள்
வரும் 10,11-ம் தேதிகளில் குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம்
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 10,11-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி மூன்று மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அண்மை காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தும் வழங்கியும், புதிய திட்டங்களை அறிவித்தும் வருகிறார்.
இதுவரை கிட்டத்தட்ட 20 மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து வரும் 10,11-ம் தேதிகளில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.