செய்திகள்
லஞ்சம்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது? - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசம்

Published On 2020-11-02 19:15 GMT   |   Update On 2020-11-02 19:15 GMT
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது?” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
மதுரை:

“புற்றுநோயை விட கொடியதாக சமுதாயத்தில் லஞ்சம் பரவி வருகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது?” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

சென்னையை சேர்ந்த சூரியபிரகாசம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-



விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. அப்படி இருக்கும்நிலையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அதுபோல தமிழகத்தில் நெல் விளையும் பகுதிகளில் ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையங்களை அரசு நிறுவி உள்ளது. அந்தந்த பகுதிகளில் நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையங் களில் விற்றுக்கொள்ளலாம்.

ஆனால் தமிழக டெல்டா பகுதிகளில்தான் அதிக அளவில் நெல் விளைச்சல் உள்ளது. இங்குள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பதற்கு பல நாட்கள் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் நெல் மூட்டைகள் முழுவதும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகின்றன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை தவிர்க்க, தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், நெல் கொள்முதல் செய்ய தாமதமாகும்பட்சத்தில் விவசாயிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?” என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் ராதாதேவி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “தமிழ்நாட்டில் 862 கொள்முதல் நிலையங்கள் உள்ளன. கொள்முதல் நிலையங்களை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல். அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர்.

பின்னர் “அறிக்கையில், கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அடுத்த வரியில் ஊழல் அதிகாரிகளை கண்காணிக்க குழு அமைத்து, முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. முறைகேடு நடைபெறவில்லை என்றால் 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், “இதுபோன்ற தவறான தகவலை கோர்ட்டில் தெரிவிக்கும் அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும்” எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், “விவசாயிகள் இரவு-பகல் பாராமல் கண் விழித்து, பாம்பு போன்ற உயிரினங்களின் தீண்டல்களையும், வலி வேதனைகளையும் அனுபவித்து நெல் அறுவடை செய்கின்றனர். இந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் அவற்றை உரிய நேரத்தில் வாங்கிக்கொள்ளாமல், விவசாயிகளிடம் லஞ்சம் பெற்று பிச்சை எடுத்து வருகின்றனர். லஞ்சம் வாங்குவது சாதாரண விஷயம் போலவும், லஞ்சம் வாங்காதவரை சமுதாயத்தில் பிழைக்கத்தெரியாதவர் என்றும், வேலை தெரியாதவர் என்றும் கேலி செய்து வருகின்றனர். சமுதாயத்தில் லஞ்சம் என்பது புற்றுநோயை விட கொடிய நோயாக பரவி வருகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது?” எனவும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, “தமிழக அரசின் அறிக்கை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இந்த விவகாரத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்? எவ்வளவு பணம் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் எதிர்மனுதாரராக வேளாண்மை துறை செயலாளரை சேர்க்கிறோம். இதுகுறித்து அவரும் பதில் அளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், அரசுத்துறைகளில் லஞ்ச ஒழிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. பின்னர் விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News