செய்திகள்
ஈரோட்டை சேர்ந்த சிறுமியை கடத்தி திருமணம் செய்த சிறுவன் கைது
ஈரோட்டை சேர்ந்த சிறுமியை கடத்தி திருமணம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பெருந்துறையை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலில் நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தங்கையான 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி மற்றும் சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் தளிகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன், சிறுமியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்பட்ட சிறுமி மற்றும் சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு இதே சிறுமியை ஈரோடு மாவட்டம் சித்தோடு, பச்சப்பாளியை சேர்ந்த ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்ததாக பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக சிறுமியின் சகோதரர் அளித்த புகாரில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.