செய்திகள்
ஆற்றை கடப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தனது காலில் அணிந்திருந்த காலணியை கையில் எடுத்து சென்ற காட்சி.

மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ஓ.பன்னீர்செல்வம்

Published On 2020-11-01 02:41 GMT   |   Update On 2020-11-01 02:41 GMT
மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 50 குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரவும் உத்தரவிட்டார்.
தேனி:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மேலப்பரவு கிராமம். இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றி நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியின் குறுக்கே மேற்கு தொடர்ச்சிமலை பகுதியான குரங்கணி - கொட்டகுடி ஆறு செல்வதால் மழை காலங்களிலும், பருவ மழை காலங்களிலும் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களும், விவசாயிகளும் தங்களது விளை பொருட்களை எடுத்துச்செல்ல முடியாமலும், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆற்றை கடக்க முடியாமலும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வந்தனர். அவர்கள் வசித்து வரும் வீடுகளும் மிகுந்த சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் உடனடியாக 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் சாலைகள் பழுதடைந்திருப்பதாகவும், அதை சரிசெய்து தரவும் அப்பகுதி மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அப்பகுதியில் சாலை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த பணிகளையும் பார்வையிட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதை எண்ணி மலை கிராமபகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.க்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

ஆய்வு செய்ய சென்றபோது, குறைவான அளவு நீர் நிரம்பியிருந்த ஆற்றை கடக்க வேண்டியதிருந்தது. ஆற்றை கடப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தனது காலில் அணிந்திருந்த காலணியை கையில் எடுத்து சென்றார். அப்போது அருகில் இருந்த அவரது உதவியாளர், காலணியை தன்னிடம் தருமாறு கேட்டார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘வேண்டாம்... நானே வைத்து கொள்கிறேன்’, என்று தெரிவித்தார். உதவியாளர் பலமுறை கேட்டும் ஓ.பன்னீர்செல்வம் அதை பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

அதன்பின்னர் காலணியை ஒரு கையில் எடுத்து சென்றவாறே ஆற்றை கடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பான வீடியோ காட்சியும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை அனைவரும் பார்த்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News