செய்திகள்
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 பவுன் நகை- ரூ.1 லட்சம் திருட்டு
பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் முபாரக்பாஷா. இவருடைய வீடு செங்குணம் பிரிவிற்கும் -தண்ணீர்பந்தல் பகுதிக்கும் இடையே வயல்காட்டுக்கு அருகில் 2 பகுதிகளாக உள்ளது. முபாரக் பாஷா 4 ரோடு பகுதியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு முபாரக் பாஷா சென்று விட்டார். அவரது மனைவி ரஹ்மானியா(வயது 40) தனது மூத்த மகனுடன், பட்டறை பாதுகாப்பிற்காக அங்கேயே தங்கிவிட்டார். இந்தநிலையில் ரஹ்மானியாவின் தாய் வானிசையிதா, வீட்டின் ஒரு பகுதியை பூட்டிவிட்டு பேரக்குழந்தையுடன் மற்றொரு பகுதியில் மாடியில் தூங்கினார்.
இந்தநிலையில் வானிசையிதா நேற்று காலை எழுந்து வீட்டிற்கு கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவும், வீட்டின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், கண் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் 15 பட்டுப்புடவைகள் திருட்டு போயிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து தனது மகள் ரஹ்மானியாவுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் இது குறித்து, பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வீட்டை மோப்பம் பிடித்தபடி சென்ற அந்த நாய், சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர் பகலில் அடிக்கடி நோட்டமிட்டு இந்த திருட்டை நடத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர். பெரம்பலூர் நகர்ப்பகுதியிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.