செய்திகள்
7.5 சதவீத இடஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:
மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது.
ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு கவர்னர் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவரை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையும் கருத்து தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மருத்துவபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மசோதா மீது முடிவெடுக்க 4 வார காலம் அவசாகம் வேண்டும் என கவர்னர் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால், தமிழக அரசு, நீதித்துறை, மாநில கவர்னர் ஆகிய 3 துறைகளுக்கு இடையே அரசியலமைப்பு ரீதியிலான குழப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.