செய்திகள்
போராட்டம் நடந்த பகுதி

கைது செய்யப்பட்ட குஷ்பு தங்கவைக்கப்பட்டுள்ள கேளம்பாக்கம் விடுதி முன் விசிக தர்ணா போராட்டம் - பரபரப்பு

Published On 2020-10-27 06:26 GMT   |   Update On 2020-10-27 06:26 GMT
கைது செய்யப்பட்ட பாஜக-வின் குஷ்பு தங்கவைக்கப்பட்டுள்ள விடுதி முன் விசிக கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த பாஜகவினருக்கும், விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாமல்லபுரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால், சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும், தொல்.திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் காவல்துறை அனுமதியின்றி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சிதம்பரம் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கேளம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நடிகை குஷ்பு தங்கவைக்கப்பட்டிருந்த விடுதி முன் திரண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் குஷ்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட்டனர். 

மேலும், அந்த விடுதிக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாஜகவினரும் திரண்டதால் விடுதலை சிறுத்தினருக்கும் பாஜகவினருக்கும் இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, தள்ளுமுள்ளில் ஈடுபட்ட பாஜக-விசிக ஆகிய இரண்டு கட்சியினரையும் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News