செய்திகள்
பனை மரத்தில் மோதிய கார்

மதுரை அருகே மரத்தில் கார் மோதி 2 பேர் பலி

Published On 2020-10-27 05:45 GMT   |   Update On 2020-10-27 05:45 GMT
மரத்தில் கார் மோதிய விபத்தில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
பேரையூர்:

சங்கரன்கோவில் தாலுகா வடமலாபுரம் பந்தபுலியை சேர்ந்தவர் செல்வசேகரன்(வயது 61). ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். அதே ஊரை சேர்ந்தவர் முருகவேல்(60). முன்னாள் ராணுவ வீரர். இருவரும் உறவினர்கள் ஆவார்கள். செல்வசேகரன் புதிய வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு டைல்ஸ் கற்கள் வாங்குவதற்காக செல்வசேகரன், முருகவேல் இருவரும் வடமலாபுரம் பந்தபுலியில் இருந்து கார் ஒன்றில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள சோலைப்பட்டி அருகே வரும்போது கார் திடீரென நிலை தடுமாறி சாலையில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்த பனை மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த செல்வசேகரன், முருகவேல் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கலிங்கப்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் சங்கையா என்பவர் படுகாயம் அடைந்தார்.

சம்பவ இடத்துக்கு டி.கல்லுப்பட்டி போலீசார் விரைந்து சென்று இறந்த இருவருடைய உடலையும் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த டிரைவர் சங்கையாவை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News