செய்திகள்
பாஜக

உண்மைக்கு மாறான மனுநீதியை வைத்து அரசியல் செய்வதா?- திருமாவளவனுக்கு பா.ஜனதா கண்டனம்

Published On 2020-10-26 11:03 GMT   |   Update On 2020-10-26 11:03 GMT
ஆங்கிலேயரால் எழுதப்பட்ட உண்மைக்கு மாறான மனுநீதியை வைத்து அரசியல் செய்வதா? என்று திருமாவளவனுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை:

மனுஸ்மிருதி நூலில் இருப்பதாக இந்து பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை திருமாவளவன் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி உள்ளன. வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இது தொடர்பாக விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருமாவளவன் மற்றும் மு.க.ஸ்டாலின் அவர்களே, மனு ஸ்மிருதியை எழுதியது யார்? அதற்கான வரலாற்று ஆவணங்கள் உங்களிடம் உள்ளனவா?

இந்தியாவில் எப்போது, எந்த காலகட்டத்தில் மனு நீதி கடைபிடிக்கப்பட்டது என்று உங்களால் சொல்ல முடியுமா?

சர். வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயனால் 1794-ம் ஆண்டு மனுஸ்மிருதி என்ற நூல் எழுதப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? இஸ்லாமியர்கள் ‌ஷரியத் முறையை பின்பற்ற வேண்டும் என்றும், இஸ்லாமிய மற்றும் இந்து சட்ட விதிகளை, பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இருந்த நெறி முறைகளை, சமய மற்றும் சமூக கட்டமைப்புகளை, தங்களின் ஐரோப்பிய முறைப்படியான கருத்துக் களோடு திணித்து மாற்றிய மைத்தது அன்றைய ஆங்கிலேயே நிர்வாகம் என்று அப்துல்லா ‘அகமது அன்நைம்‘ என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளது தங்களுக்கு தெரியுமா?

நீங்கள் கூறிய மனு தர்ம நூல் 1887-ம் ஆண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தால் உண்மைக்கு புறம்பானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

அப்படி உங்களுக்கு தெரியும் என்றால், நீங்கள் மேற்கோள் காட்டிய மனு தர்ம நூல் என்பது ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்டது என்ற அடிப்படையில் இந்து மதத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிற நிலையில், மதங்களுக்கிடையே வெறுப்பை தூண்டி விட்டு மதக்கலவரத்தை தமிழகத்தில் உருவாக்க முயற்சிக்கிறீர்கள் என்ற எங்களின் குற்றச்சாட்டு மேலும் வலுவடைகிறது.

50-க்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி பதிப்புகள் உள்ள நிலையில், இவைகளில் பெரும்பாலானவை அந்நியர்களால் எழுதப்பட்டவை என்பதும் சமீபத்திய உங்களின் பேச்சு கூட, தொடர்ந்து இந்து கடவுள்களையும், இந்தியாவையும், இந்துக்களையும் அவதூறாக, ஆபாசமாக சித்தரிக்கும் அமெரிக்காவின் வெண்டி டோனிகரின் புத்தகத்திலிருந்தே சொல்லப்பட்டது. இதன் மூலம் சில நூற்றாண்டுகளாக இந்திய கலாச்சாரத்தை சீர் குலைக்க முயற்சிக்கும் அந்நிய நாடுகளின் சதிக்கு துணை போகிறீர்கள் என்பது தெரிகிறது.

இந்துக்கள் ஏற்காத, இந்துக்களால் பின்பற்றப் படாத வி‌ஷயங்களை மேற்கோள் காட்டி, இந்துக்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தால், இஸ்லாமியர்கள் மீதும், கிருஸ்துவர்கள் மீதும் எதிர்வினையாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு திட்டமிட்ட ரீதியில் நீங்கள் தவறான தகவலை அளித்ததோடு, உங்களின் அரசியல் உள் நோக்கத்திற்காக ஒட்டுமொத்த இந்து பெண்களையும் அவதூறாக பேசி அவமானப்படுத்தியது குற்றமல்லவா? இது மலிவான அரசியல் என்பதோடு மதவாத அரசியல் என்பது தெளிவாகிறதல்லவா?

இந்தியா என்பது ஒரே நாடு அல்ல, பலநாடுகளால் இணைக்கப்பட்ட தேசம் என்றும், தமிழர்கள் தனி நாகரீக, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை கொண்டவர்கள் என்று திராவிட இயக்கங்கள் தொடர்ந்து கூறிவந்துள்ள நிலையில், தற்போது மனுநீதி அடிப்படையில் 2000 வருடங்களாக பெண்ணுரிமை பாதிக்கப் படுவதாக கூறுவது முரணாக இல்லையா? அப்படியானால், இந்தியா ஒரே தேசமாக இருந்தது என்று இதுநாள் வரை தாங்கள் கூறியது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? அல்லது இது நாள் வரை இந்து மதம் குறித்து திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் கூறியது அனைத்தும் அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் என்பதை ஏற்று கொள்கிறீர்களா?

அமைதி பூங்காவான தமிழகத்தில் மதங்களுக் கிடையே குழப்பத்தை ஏற்படுத்தி கலவரங்களுக்கு வித்திட்டு, அரசியல் லாபமடைய பார்க்கும் உங்கள் கூட்டணியின் முயற்சியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு தவிடு பொடியாக்குவார்கள். அந்நிய தீய சக்திகளுக்கு துணை போகாமல், பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு மாநில மற்றும் தேச நலனில் அக்கறை செலுத்துங்கள். ஆக்கபூர்வ அரசியல் செய்யுங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News