செய்திகள்
மதுரை கலெக்டர் வினய்

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூடும் கடைகளுக்கு சீல்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-10-26 09:26 GMT   |   Update On 2020-10-26 09:26 GMT
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூடும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் வினய் எச்சரிக்கை செய்துள்ளார்.
மதுரை:

மதுரையில் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதன்பின் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் குறைந்து உள்ளது. அதாவது பரவல் குறைந்து இருக்கிறதே தவிர முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணம் மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் நடத்திய காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடந்தன. தற்போது இந்த முகாம் தினமும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் கொரோனா பரவலுக்காக போடப்பட்ட ஊரடங்கில் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. தற்போது எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் கூட்டம், கூட்டமாக வலம் வருகின்றனர்.

தற்போது பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் துணிகள், நகைகள் எடுப்பது, மளிகை கடைகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள இடங்கள், கீழமாசி வீதி, நெல்பேட்டை, விளக்குத்தூண், கீழமாரட் வீதி, மகால் தெரு, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெருக்கடியும் உள்ளது. போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தாலும், முழுமையாக ஒழுங்குப்படுத்தப்பட முடியவில்லை. இந்த நிலையில் மதுரையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தவறும் வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று கலெக்டர் வினய் எச்சரிக்கை செய்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது முடக்கம் சில தளர்வுகளுடன் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு வழிப்பாட்டுத்தலங்கள், சந்தைகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள், பூங்காக்கள், உணவகங்கள் ஆகியவற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

முக கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் கொரோனா தொற்று பரவாமல்தடுக்க அரசின் விதிமுறை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியமாகிறது. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும். சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் குழு அரசின் விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என பொது இடங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர்.

எனவே கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைக்கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். எந்த இடத்திலும் கண்டிப்பாக கூட்டம் கூட கூடாது. வியாபார நிறுவனங்கள் இந்த பண்டிகை காலத்தில் தங்களது கடைகள் மற்றும் நிறுவனங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருப்பது, கடைகளில் கூட்டமாக கூடுவது போன்றவை ஆய்வில் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த கடைகள் சீல் வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News