செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி

குஷ்பு உருவபொம்மையை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

Published On 2020-10-26 08:54 GMT   |   Update On 2020-10-26 08:54 GMT
கும்பகோணம் அருகே நடிகை குஷ்பு உருவபொம்மையை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்:

மனு தர்ம நூல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனு தர்ம நூலை தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் கடை வீதியில் தொகுதிச் செயலாளர் புலவர் சந்திரசேகரன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தப் பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

மேலும் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறியதை கண்டித்து ஒன்றிய செயலாளர் மதியழகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ், நகர செயலாளர்குமார், மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் அமுதன், துரையரசன் உள்பட பலர் குஷ்பு உருவ பொம்மையை எரித்தனர்.

அப்போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News