செய்திகள்
கொலை

சாராயம் விற்பதை போலீசாருக்கு தகவல் கொடுத்த பாமக பிரமுகர் கொலை

Published On 2020-10-26 06:26 GMT   |   Update On 2020-10-26 06:26 GMT
சாராயம் விற்பதை போலீசாருக்கு தகவல் கொடுத்த பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரக்காணம்:

விழுப்புரம் அருகே தலக்காணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 40). பா.ம.க. பிரமுகர். இவர் நேற்று முன்தினம் மரக்காணம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் பாரதி கிடைக்கவில்லை.

இதனிடையே மக்காணம் பக்கிங்காம் கால்வாய் அருகே ஆதிதிராவிடர் உப்பளம் பகுதியில் வாலிபர் வெட்டப்பட்டு பிணமாக கிடப்பதாக மரக்காணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி போலீசார் அங்கு விரைந்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பா.ம.க. பிரமுகர் பாரதி என தெரியவந்தது.

இதுகுறித்து உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாரதியை அடையாளம் காட்டினர். இவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாரதியின் மோட்டார் சைக்கிளை கைப்பறி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் சாராயம் விற்பவர்கள் குறித்து போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்து வந்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட சாராய வியாபாரிகள் பாரதியை கொலை செய்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புதுவையை சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News