செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மோதி முதியவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 62). இவர் தனது மனைவியுடன் கோயம்புத்தூருக்கு திருமணத்திற்குசெல்வதற்கு ராஜபாளையத்தில் இருந்து பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி என்ற இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்த நிறுத்தப்பட்டது. அப்போது ஈஸ்வரன் சிறுநீர் கழிப்பதற்காக சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக ராஜபாளையத்தை சேர்ந்த ஆனந்த் குமார் (24) என்பவர் ஓட்டி வந்த கார், ஈஸ்வரன் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.