செய்திகள்
பெண்ணிடம் ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் குழு மஞ்சள் நிற அட்டை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்யும் காட்சி.

ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு

Published On 2020-10-25 03:06 GMT   |   Update On 2020-10-25 03:06 GMT
ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘என் தோழி’ அமைப்பை ரெயில்வே பாதுகாப்பு படை தொடங்கி உள்ளது. பத்திரமாக அவர்கள் வீடு சென்று சேரும் வரை கண்காணிக்கின்றனர்.
சென்னை:

எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ‘மேரி ஷாயிலி’ எனப்படும் ‘என் தோழி’ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கான இந்த புதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில்வே மண்டலங்களிலும் தொடங்கப்பட வேண்டும் என கடந்த 15-ந் தேதி ரெயில்வே வாரியம் அந்தந்த மண்டல ரெயில்வே பாதுகாப்பு படை முதன்மை தலைமை பாதுகாப்பு கமிஷனருக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

அதன்படி தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் ‘என் தோழி’ திட்டம் ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

‘என் தோழி’ அமைப்பு தென் கிழக்கு ரெயில்வேயில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. அங்கு இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி தெற்கு ரெயில்வேயில் நேற்று முன்தினம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு, பாதுகாப்பு படை பெண் போலீஸ், அவர்களின் தோழியை போல் உடன் இருந்து பயணத்தை இனிமையாக்குவார்கள். பயணத்தின்போது ஏதேனும் இடையூறு அல்லது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக அவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையின் மூலம் உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரெயில் புறப்படும் இடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் 5 பெண்கள் கொண்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் ரெயில் புறப்படுவதற்கு முன்பாக, தனியாக பயணிக்கும் பெண்களின் தகவல்களை சேகரித்து, அவர்களிடம் நேரடியாக சென்று அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? அவர்கள் முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்றுக்கொள்வார்கள். பின்னர் பயணத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ரெயில்வே பாதுகாப்பு படையின் கட்டுப்பட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், அதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வழங்குவார்கள். ரெயில் புறப்பட்டதும், அடுத்த ரெயில்வே கோட்டத்தில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அந்த பெண் பயணிக்கும் பெட்டி மற்றும் இருக்கை எண் அனுப்பி வைக்கப்படும்.

ரெயில் அங்கு நின்றதும், அங்கிருக்கும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பெண் எந்த பிரச்சனையும் இன்றி பயணம் மேற்கொள்கிறாரா என்பதை உறுதிபடுத்தி கொள்வார்கள். இவ்வாறாக அந்த பெண் சென்று சேரவேண்டிய ரெயில் நிலையம் வரை ஒவ்வொரு ரெயில்வே கோட்டத்திலும், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயிலில் ஏறி அந்த பெண் பாதுகாப்பாக பயணிக்கிறாரா என உறுதிப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.

இதன் மூலம் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு ரெயில் பயணத்தில், ஒரு தோழியாக பெண் போலீசார் கூடவே இருக்கும் சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துள்ளோம். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் புதிய தோழிகள் (பாதுகாப்பு படை பெண் போலீஸ்), அந்த பெண் பயணிக்கு அறிமுகமாவார்கள். இறுதியாக அந்த பெண் பத்திரமாக வீடு சென்று சேர்ந்தாரா என்பதை உறுதிப்படுத்தும் வரை, ரெயில் புறப்பட்ட இடத்தில் உள்ள பெண் பாதுகாப்பு படை குழு அவரை கண்காணித்து வரும்.

இதுதவிர தனியாக பயணிக்கும் பெண்கள் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என கையில் ஒரு மஞ்சள் நிற அட்டையை கொடுத்து அனுப்பி வைக்கப்படும். அவசர காலத்தில் உதவிகோர அந்த அட்டை பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் விரைவில் தெற்கு ரெயில்வேயின் அனைத்து ரெயில் நிலையங்களிலும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News