செய்திகள்
அய்யம்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
அய்யம்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே புது மாத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி இந்திரா காந்தி(வயது 45). சம்பவத்தன்று மாலை இவர் பசுபதிகோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர், இந்திராகாந்தி காதில் அணிந்திருந்த தோடு, கழுத்தில் அணிந்திருந்த தாயத்து, காசு உள்ளிட்ட 8 கிராம் மதிப்புள்ள நகைகளை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து இந்திராகாந்தி கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெடார் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்த லோகநாதன்(30) என்பதும், அவர் தான் இந்திராகாந்தியிடம் நகைகளை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் பறித்து சென்ற நகைகளை பறிமுதல் செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.