செய்திகள்
கோப்புபடம்

ஹாங்காங் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி: தந்தை-மகன் கைது

Published On 2020-10-24 06:42 GMT   |   Update On 2020-10-24 06:42 GMT
ஹாங்காங் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:

கொடைக்கானல் கோகினூர் பங்களா பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவர், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். எனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு இருந்தேன். இந்த நிலையில் கொடைக்கானல் நேதாஜிநகரை சேர்ந்த சஞ்சீவி (வயது 63) அவருடைய குடும்பத்தினர் அறிமுகம் ஆகினர். அப்போது எனது தொழிலை விரிவுபடுத்த வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறினர்.

அதை உண்மை என நம்பி நானும் சம்மதித்தேன். இதையடுத்து ஹாங்காங் வங்கியில் ரூ.600 கோடி கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர். அதற்கு ஆவண செலவு உள்ளிட்டவற்றுக்கு எனக்கூறி அவ்வப்போது முன்பணம் பெற்றனர். அந்த வகையில் மொத்தம் ரூ.40 லட்சம் கொடுத்தேன். ஆனால், பேசியபடி கடன் பெற்றுத்தரவில்லை. இதனால் எனது பணத்தை திரும்ப கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும், என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சஞ்சீவி, அவருடைய மனைவி ராணி, மகன்கள் இமானுவேல், ஜெயக்குமார், டிரைவர் குமார் ஆகிய 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராணி, ஜெயக்குமார், குமார் ஆகியோர் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர். இதனால் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் மற்றும் போலீசார் நேற்று சஞ்சீவி, இமானுவேல் ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News