செய்திகள்
நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகளை சுங்கத்துறையினர் பார்வையிட்டதை படத்தில் காணலாம்.

இலங்கைக்கு கடத்த முயற்சி : நடுக்கடலில் 10 மூடை மஞ்சள் பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2020-10-21 01:03 GMT   |   Update On 2020-10-21 01:03 GMT
இலங்கைக்கு கடத்த முயன்ற 10 மூடை மஞ்சளை நடுக்கடலில் ராமேசுவரம் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்:

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து ராமேசுவரம் சுங்கத்துறை சூப்பிரண்டு ஜோசப் ஜெயராஜ் தலைமையில் சுங்கத் துறையினர் நேற்று முன்தினம் இரவு பாம்பனில் இருந்து ஒரு படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, இந்திய கடல் எல்லை அருகே நடுக்கடலில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகை சோதனை செய்தனர்.

அதில் சுமார் 10 மூடைகளில் மஞ்சள் இருந்தது தெரியவந்தது. எனவே அந்த படகில் இருந்த வேதாளையைச் சேர்ந்த மலைராஜ் (வயது 45) மாரிச்சாமி (28), காஜா (30) ஆகிய 3 பேரையும் கைது செய்த சுங்கத்துறையினர், நாட்டுப்படகை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த 3 பேரையும், மஞ்சளையும் ராமேசுவரம் சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இதுபற்றி ராமேசுவரம் சுங்கத்துறை சூப்பிரண்டு ஜோசப் ஜெயராஜ் கூறியதாவது:-

மொத்தம் 10 மூடைகளில் இருந்த 500 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளுடன் வரும் கடத்தல் ஏஜெண்டுகளுக்கு இந்த மஞ்சள் மூடைகளை கைமாற்றுவதற்காக எதிர்பார்த்து, இந்த 3 பேரும் காத்திருந்ததாக தெரிவித்தனர். எனவே தங்கக்கட்டிகளுடன் வரும் கடத்தல்காரர்களை பிடிக்க வெகு நேரமாக காத்திருந்தோம். கடத்தல்காரர்கள் யாரும் வரவில்லை. அதன்பின்னர் கரை திரும்பினோம். மஞ்சள் மூடைகளை கடத்த முயன்ற வழக்கில் மேலும் சிலரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ மஞ்சளுடன் நடுக்கடலில் பிடிபட்ட 3 பேரிடம் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்த சுங்கத்துறையினர் அனுமதிக்கவில்லை என்றும், இதனால் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் உளவுப்பிரிவு போலீசார் குற்றம்சாட்டினர்.
Tags:    

Similar News