செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிப்பதை காணலாம்

கிருஷ்ணா நதிநீரால் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி

Published On 2020-10-20 07:20 GMT   |   Update On 2020-10-20 07:20 GMT
பூண்டி ஏரியில் இருந்து கிருஷ்ணா நதிநீர் வருகையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
பூந்தமல்லி:

குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கடந்த ஆண்டு வறண்டு கிடந்தது. கிருஷ்ணா நிதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஒரு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அங்கிருந்து தேவைப்படும்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும்.

தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மழை அதிகளவில் பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 16.31 அடியாக உள்ளது. 1,780 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து 480 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு தினந்தோறும் 59 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோயம்பேட்டில் இருந்து மூன்றாம் கட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு சென்று கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிப்காட்டுக்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும் முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதிநீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News