செய்திகள்
தேனியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசிய போது எடுத்த படம்.

போடி தொகுதியை அதிமுக கைப்பற்ற முடியாது- தங்க தமிழ்செல்வன் பேச்சு

Published On 2020-10-18 07:06 GMT   |   Update On 2020-10-18 07:06 GMT
கோடி, கோடியாக பணத்தை கொட்டி கொடுத்தாலும் போடி தொகுதியை அ.தி.மு.க. வால் கைப்பற்ற முடியாது என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கூறினார்.
அல்லிநகரம்:

தேனியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகர செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தேனி வடக்கு மாவட்ட பொறுப் பாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஒரு சதவீதம் தான் ஓட்டு வித்தியாசம் இருந்தது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தை கடனில் தத்தளிக்கும் மாநிலமாக ஆக்கியது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை. மக்கள் பணியாற்றவே நான் தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் எந்த தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்டாலும் அவரை தோற்கடிப்போம்.

குறிப்பாக போடி தொகுதி மக்களுக்கு கோடி கோடியாக பணத்தை கொட்டி கொடுத்தாலும் அ.தி.மு.க.வால் அந்த தொகுதியை கைப்பற்ற முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மு.க. ஸ்டாலினை முதல்- அமைச்சராக்கியே தீர வேண்டும். அப்போது தான் தமிழும், தமிழகமும் தலை நிமிரும். ஊழலற்ற ஆட்சி நடைபெறும் என்றார்.

கூட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணன், தி.மு.க. பிரமுகர் கே.எஸ்.ஆர். சரவணக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர் செல்வத்துக்கு பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பதுக்கி வைப்பதற்காகவே ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி எம்.பி. யுமான ரவீந்திர நாத் மொரீசியஸ் நாட்டுக்கு சென்று இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News