செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

முதலமைச்சர் தாயார் மறைவு- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

Published On 2020-10-13 05:18 GMT   |   Update On 2020-10-13 05:18 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

தகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உடல்  தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு முதல்வர் அவர்களின் அன்புத்தாயார் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். தாயாரது பிரிவால் வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News