செய்திகள்
ஜல்லிக்கட்டு காளை முட்டி வாலிபர் பலி
மேலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகாபுரியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 23). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வம் உடையவர். இந்த நிலையில் அவர் மேலூரில் உள்ள வினோபா காலனியில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் நண்பர் ஒருவரை பார்க்க வந்தார். அப்போது அங்குள்ள குளத்தில் நண்பர் வளர்த்த காளையை குளிப்பாட்டி உள்ளார். அப்போது அந்த காளை எதிர்பாராதவிதமாக ரமேஷை கொம்பால் முட்டியது.
இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் பலத்த காயத்துடன் சுருண்டு விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.