செய்திகள்
கோப்புபடம்

ராஜபாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2020-10-12 12:28 GMT   |   Update On 2020-10-12 12:28 GMT
ராஜபாளையத்தில் நெசவாளர் குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது இ.எஸ்.ஐ. நெசவாளர் குடியிருப்பு. இங்கிருந்து இந்திரா நகர் செல்லும் வழியில், தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டு புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு வருவாய் துறை சார்பில் ஏற்பாடு நடைபெற்றது.

இங்கு கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து அவர் மாவட்ட கலெக்டரிடம் நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தினார்.

இந்தநிலையில் பொது மக்கள் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடை திறப்பதற்காக தரை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. அத்துடன் மின் இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த இந்திரா நகர், இ.எஸ்.ஐ. நகர், நெசவாளர் காலனி, லீலாவதி நகர் உள்ளிட்ட 8 பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் திரண்டு டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அடிப்படை வசதிகள் எதுவும் எங்களுக்கு செய்து தரவில்லை. மாறாக இங்கு டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே கடையை திறக்க கூடாது என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ராஜபாளையம் தெற்கு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். கடை திறக்கப்படாது, அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News